செய்தியாளர்: விக்னேஷ்முத்து
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிப்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வியாளர்கள் தெரிவிப்பது என்ன ?.
இளங்கலை, முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தலாம்.
உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்கல்வி நிறுவனமே முடிவு செய்யலாம். உயர்கல்வி, தொழிற்கல்வி, பயிற்சி, திறன் மேம்பாடு, இன்டர்ன்ஷிப் ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்த பாடத் திட்டத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.
மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தவும், தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2-வில் அறிவியல், கணிதம், வணிகவியல் என எந்த பாடப்பிரிவை தேர்வு செய்திருந்தாலும், விரும்பிய பட்டப் படிப்பில் சேரலாம். இதற்காக, தேசிய அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். உயர்கல்வி நிறுவனங்களில் போதிய கல்வி, அடிப்படை வசதி இருந்தால், இளங்கலை, முதுகலை படிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் இளங்கலையில் 2 பட்டப் படிப்புகளையும் முதுகலையில் 2 படிப்புகளையும் படிக்கலாம். மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு தேவையை தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் உயர்கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யலாம்.
இளங்கலை பட்டப் படிப்பின் காலம் 3 அல்லது 4 ஆண்டுகளாகவும், முதுகலை படிப்பின் காலம் 1 அல்லது 2 ஆண்டுகளாக இருக்கும். 4 ஆண்டு கால இளங்கலை படிப்பை முடிப்பவர்கள் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரலாம். இந்தத் திட்டத்தில் நிறைகள் பல இருந்தாலும், நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்கிறார் கல்வியாளர் செல்வக்குமார்.
கல்வித்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வரும் போது அனைத்து மாநிலங்களின் கருத்தை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.