கல்வி

பாட்டு, நடனம் மூலம் ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்!!

Sinekadhara

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எளிதில் தமிழ் எழுத்துக்களை கற்கும் விதத்தில் அரசு பள்ளி ஆசிரியர் நடனம் மூலம் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மாணவ மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்துவந்த நிலையில் தற்போது அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் புதிதாக அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தமிழக அரசும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயில்வதற்காக கல்வித் தொலைக்காட்சி மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை தொடங்கியுள்ளனர்.

அதேபோல் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கவரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள மீனா என்ற ஆசிரியர், மாணவ மாணவிகளுக்கு தமிழ் எழுத்துக்களை பல்வேறு அசைவுகள் மூலம் நடனமாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இவர் கற்பிக்கும் இந்தப் பாடங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து இதே போல நடன வடிவிலான பாடம் நடத்தும் திட்டங்களை பதிவேற்றம் செய்து அதனை மாணவர்கள் அறியும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட போவதாகவும் ஆசிரியர் மீனா கூறியுள்ளார்.

மேலும், ஆன்லைனில் பாடம் நடத்தும்போது சிறு குழந்தைகளை கவனிக்க வைப்பதில் சிரமம் உள்ளதாக பல பெற்றோர்கள் கூறியிருக்கின்றனர். சிறு குழந்தைகளை பெரிதும் கவர்வது இசை மற்றும் நடனம்தான் என்பதால் அதையே குழந்தைகளுக்கு கற்பிக்க பயன்படுத்தலாம் என முடிவு செய்ததாக மீனா கூறுகிறார்.