பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் 
கல்வி

தகுதி அடைந்தும் பட்டம் கிடைக்காமல் தவிக்கும் பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள்!

PT WEB

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என திருச்சி,  தஞ்சை,  திருவாரூர்,  புதுக்கோட்டை,  அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 143 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஒவ்வொரு கல்லூரியிலும் சுமார் 1500 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

இப்படியான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், கொரோனா பரவல் காலகட்டத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதுவும், 2020-க்கு முன்பு படித்து பட்டம் பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா. அதில் தமிழ்நாட்டின் ஆளுநர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேரடியாக பட்டம் வழங்கினர். அதன் பின்னர் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.

இதனால், இக்கல்லூரிகளில் கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆம் கல்வியாண்டுகளில் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் படித்து முழுமையாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்னும் பட்டம் வழங்கப்படாமல் உள்ளது.

பட்டமளிப்பு தள்ளிப்போவதால் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை ஆகியவற்றை பெறுவதில், மாணவர்களுக்கு  சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தப்படாதது மற்றும் பட்டமளிக்கப்படாததன் பின்னணியில், “பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான அனுமதி ஆளுநர் தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை. மேலும் உயர்கல்வித்துறை அமைச்சகத்துடன் பனிப்போர் நிலவுகிறது” என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அழகப்பா பல்கலைக்கழகம் நீங்கலாக,  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதே நிலை தொடர்வதாக  மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விரிவாக சொல்லவேண்டுமெனில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 3 ஆண்டுகளாக படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால், பட்டப்படிப்பை முடித்து தகுதியான 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் பலர் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலும்,  வெவ்வேறு கல்லூரிகளில் உயர்கல்விக்கு விண்ணப்பித்து, அனுமதி கிடைத்தபோதும் அதை படிக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

மூன்று மாதம் மட்டுமே செல்லத் தக்க சான்றிதழை (Provisional certificate) கொண்டு, பல மாணவர்கள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.

சிலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைத்தும் இங்கு இன்னும் பட்டம் கிடைக்காததால், வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். விரைந்து இதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.