வழக்கறிஞரை வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவா pt desk
குற்றம்

வாணியம்பாடி | வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

வாணியம்பாடியில் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி... இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற குற்றவாளியை பிடித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர், கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த கானா முருகன் என்பவர் மீதுள்ள வழக்கு தொடர்பாக கண்ணாதாசன் சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடி வந்தார்.

இந்நிலையில், கானா முருகன் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாகியுள்ளார். இந்நிலையில், கானா முருகனின் வழக்கில் வாதாட வழக்கறிஞர் கண்ணதாசன மறுத்துள்ளார், இதையடுத்து கானா முருகன் நேற்று வழக்கறிஞர் கண்ணதாசனின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்பொழுது ஆத்திரமடைந்த கானா முருகன் தான் வைத்திருந்த அரிவாளால், வழக்கறிஞர் கண்ணதாசனை வெட்டி விட்டு, கண்ணதாசனின் செல்போனை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார், இதனைக் கண்ட பொதுமக்கள், வழக்கறிஞர் கண்ணதாசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து தப்பியோடிய கானா முருகனை, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், விண்ணமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கானா முருகனை காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.