Accused
Accused pt desk
குற்றம்

திருப்பத்தூர்: போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடிய குற்றவாளி - மீண்டும் கைது...!

webteam

செய்தியாளர்: பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதையடுத்து கதிர்வேல் தான் காதலித்த பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துவிடுதாக மிரட்டியுள்ளார்.

Arrest

இதனால் அந்த இளம்பெண்ணின் தாயார் கதிர்வேல் மீது வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கதிர்வேலை கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்த, அவரது வீட்டின் முன்பு காத்திருந்தனர். அப்போது, வாணியம்பாடி நகர காவல் உதவி ஆய்வாளர் கதிர்வேல், மற்றும் காவலர் திருவருடச்செல்வம் ஆகியோர் தள்ளிவிட்டு குற்றவாளி கதிர்வேல் தப்பிச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து தப்பியோடிய கதிர்வேலை வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், வாணியம்பாடி அடுத்த ஏரி மின்னூர் பகுதி ஏரிக்கரையில் கதிர்வேல் தஞ்சமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கதிர்வேலை மீண்டும் கைது செய்தனர்.