செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவருக்குச் சொந்தமான விச்சூர் கிராமத்தில் உள்ள 3600 சதுரடி நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவரை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடியை அரங்கேற்ற துணை புரிந்த அம்சவேணி, சௌபாக்கியவதி, ரேகா, விமல்குமார் ஆகிய 4 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.