போலி டீச்சர்
போலி டீச்சர் PT
குற்றம்

ஆண்டிப்பட்டி: போலி சர்ட்டிஃபிகேட் கொடுத்து 24 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்த பெண்!

PT WEB

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராஜேந்திராநகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு தேனி பங்களாமேடு சோலைமலை ஐயர் தெருவை சேர்ந்த 47 வயதான விஜயபானு என்பவர், கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி, ராஜேந்திராநகர்

இவர் மீது சமீபத்தில் தேனி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக ரகசிய புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் விஜயபானு மீது புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கண்டமனூர் போலீசார் விஜயபானு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு நிர்வாகத்தை ஏமாற்றுவது, போலியாக ஆவணங்களை தயார் செய்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலிச்சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளியில் பெண் ஆசிரியையாக ஒருவர் 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததும் தற்போது ரகசிய புகாரின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட போது அது போலி என கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதும், தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.