உயிரிழந்த பாபு மற்றும் மகன் சதீஷ்குமார்
உயிரிழந்த பாபு மற்றும் மகன் சதீஷ்குமார் புதியதலைமுறை
குற்றம்

சத்தியமங்கலம்: மது போதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தை.. தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன்!

யுவபுருஷ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பனங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பாபு(வயது 58). கூலித் தொழிலாளியான இவருக்கு வசந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தமகன் சதீஷ்குமார்(வயது 28).

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்தில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால் சதீஷ்குமார் மனைவியுடன் சத்தியமங்கலத்தில் வசித்து வந்துள்ளார். பாபுவிற்கு குடிப்பழக்கம் இருப்பதால், தினமும் மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பாபு அவரது வீட்டில் தலையில் சரமாரியாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அறிந்த உறவினர்கள் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த பாபுவின் மகன் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் சம்பவத்தன்று இரவு, பாபு அதிகம் மது குடித்துவிட்டு மனைவி வசந்தாமணியிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் மகன் சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கவும், அங்கு வந்த சதீஷ்குமார் தந்தையை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது பாபு குடிபோதையில் ஆபாச வார்த்தைகளால் மகனை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கருங்கல்லை எடுத்து சரமாரியாக தந்தையை தாக்கியதாக தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் தந்தையை கொலை செய்ததை மகன் சதீஷ்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை சொந்த மகனே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.