செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பத்தாம் தேதி 1098 என்ற குழந்தைகள் ஹெல்ப்லைன் எண்ணிற்கு புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதன் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலர்கள் மாணவியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளியிலும் விசாரணை மேற்கொண்டனர் பள்ளியில் மூன்று மாணவர்கள், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. மாணவியின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தகவல்களை மறைத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா, ஆகிய மூன்று பேரையும் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.