திருச்செந்தூர் | அரசு விடுதி மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி – மயக்கமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மனப்பாடு. மீனவ கிராமமான இங்கு புனித வளன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு தங்கும் விடுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 8 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாணவர்களுக்கு தோசையும் தக்காளி சட்னியும் வழங்கப்பட்டது. இந்த தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததை அடுத்து. அதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக விடுதி வார்டன் அனைவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.