செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுடையார்பாளையம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்வேல் - வசந்தி தம்பதியினர். இவர்களுக்கு கவின் (21) என்ற மகனும் 17 வயதில் மற்றொரு மகனும் உள்னர். இந்நிலையில் வசந்தி அடிக்கடி போன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்வேல் மற்றும் அவரது மகன்கள் வசந்தியிடம் கேட்டுள்ளனர்.
அப்போது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாய் வசந்தியை இரு மகன்கள் மற்றும் கணவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த வசந்தி, மயங்கி விழுந்துள்ளார் இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வசந்தியை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்வேல் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.