சென்னை வளசரவாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகிக்கும் படி இருந்த நபரை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் மெத்தம்மெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் நெசத்தப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பதும், போதைப்பொருளை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ் குமார் என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் குமாரிடம் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து நடிகைகள், சினிமா ஊழியர்கள் என பலரும் போதைப்பொருட்களை வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, நடிகை அஞ்சு கிருஷ்ணன், துணை நடிகை வின்சி என்கின்ற நிவேதா மற்றும் பெரிய பனிச்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த எஸ்வந்த், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அல்பின்சா, மண்ணடியை சேர்ந்த தமீம் நிஷ்வான் ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமின் 6 கிராம், OG கஞ்சா7 கிராம், கஞ்சா 15 கிராம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நடிகை அஞ்சு கிருஷ்ணன் தமிழில் ஓம் வெள்ளிமலை திரைப்படத்திலும் மலையாள தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றொரு துணை நடிகை வின்சி என்ற நிவேதா திரைபடத்துறையில் துணை நடிகையாக உள்ளார்.