குற்றம்

மதுபோதையில் தகராறு?: மர்ம நபர் கொலை - போலீசார் விசாரணை

மதுபோதையில் தகராறு?: மர்ம நபர் கொலை - போலீசார் விசாரணை

webteam

திருப்பூர் உஷா திரையரங்கம் எதிரில் உள்ள மதுபான கூடத்தில் இன்று காலை மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலையில் உஷா திரையரங்கம் எதிரே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை இந்த டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இறந்த நிலையில் கிடந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் திருப்பூர் மாநகர துணை ஆணையர் அரவிந்த், உதவி கமிஷனர் வரதராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்த அடையாளம் தெரியாத நபரை கல்லால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இறந்தவரின் விபரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாநகர துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.