இன்டர்போல்
இன்டர்போல்  முகநூல்
குற்றம்

கூகுளில் தற்கொலை குறித்து தேடிய இளைஞர்... 2 மணி நேரத்தில் ஓடிப்போய் காப்பாற்றிய காவல்துறை!

ஜெனிட்டா ரோஸ்லின்

28 வயது இளைஞர் ஒருவர் மும்பையில் மலாடி என்னும் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக தனக்கு வேலை இல்லை என்ற காரணத்தால் வேலைத்தேடி அலைந்திருக்கிறார் இவர். இதற்கிடையில் கிரிமினல் வழக்கு ஒன்றில் சிறைசென்ற தன் தாய்க்கு ஜாமீன் பெறுவதற்கான வழியையும் தேடி இருக்கிறார். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடியவே மனமுடைந்த அந்த நபர் கூகுளில் “தற்கொலை செய்தவதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன” என்று தேடியுள்ளார்.

இதனையறிந்த இன்டர்போல் காவல்துறை அமைப்பினர் உடனடியாக மும்மை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு மணி நேரத்தில் இளைஞரின் இருப்பிடத்தையும் அறிந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக குற்றப்பிரிவு போலீசார் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு அவரிடம் தற்கொலை குறித்து தேடியதற்கான தேவை என்ன என்று கேட்டுள்ளனர்.

(இன்டர்போல் என்பது பன்னாட்டுக் குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் விரிவாக்கம் International Criminal Police Organization. இவ்வமைப்பினை ஆங்கிலத்தில் ICPO என்று சுருக்கிச் சொல்வதும் உண்டு)

சம்பந்தப்பட்ட இளைஞர் தற்கொலை தொடர்பாக தேடியதற்கான காரணம் குறித்து காவல்துறையினரிடம் கூறுகையில், “2 ஆண்களுக்கு முன்பு என் தாய் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் இருந்து வெளியில் எடுப்பதற்கு தேவையான பணத்தை என்னால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. நான் முதலில் ராஜஸ்தானில் இருந்தேன். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் மும்பை வந்தேன்.

மீரா ரோட்டில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வேலையும் இல்லாமல் போனது. பல இடங்களில் முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. எனவே மன உளைச்சல், நிதி நெருக்கடி எல்லாம் ஏற்பட்டது. இதனால்தான் கூகுளில் அப்படி தேடினேன்” என்று தெரிவித்துள்ளார்.

இன்டர்போல்

இதையடுத்து அவருக்கு உரிய தேவைகளை வழங்கி அவரை காப்பாற்றியுள்ளனர் காவல்துறையினர். இன்டர்போலின் உதவியுடன் ஒரு உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.