‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!
‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

தற்கொலை என்பது பிரச்னைகளுக்கும், தோல்விக்கும் தீர்வென்றால், இந்த உலகில் எந்த மனிதரும் உயிரோடிருக்க முடியாது. எத்தனையோ தோல்விக்குப்பிறகும் மன உறுதியுடன் போராடியவர்கள்தான் வாழ்வில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் ஒரு குட்டி கதை வழியாக இதை நமக்கு உணர்த்துகிறார். அது இங்கே...

“தேவகோட்டையை சேர்ந்த ஒரு 10-ம் வகுப்பு மாணவன். அவன் 10-ம் வகுப்பில் தேர்வில் தோல்வியடைந்துவிட்டான். தோல்வியை கண்டு துவண்டு போகும் வயது அது... அந்த வேகமும் தோல்வியும் அவனை தற்கொலை எண்ணத்துக்கு உள்ளாக்குகிறது. சரி, தேவகோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைக்கிறான் அவன்.

வெள்ளிக்கிழமை இதை முடிவு செய்கிறான் அச்சிறுவன். திங்கள்தான் ரயில் வரும் என்பதால், இரண்டு நாள்களை கடக்க வேண்டுமென நினைத்து, பொழுதுபோக்குக்காக பக்கத்திலிருந்த ஒரு நூலகத்துக்கு செல்கிறான் அவன். அங்கு சென்று, ஒரு புத்தகத்தை வாங்கி படிக்கிறான். முதலில் சுவாரஸ்யம் வராவிட்டாலும், பின் சுவாரஸ்யம் வருகிறது அவனுக்கு! வேகவேகமாக ஆர்வமாக ஞாயிறுக்குள் புத்தகத்தை படித்து முடித்துவிட்டான். தற்கொலை எண்ணத்திலிருந்தும் அவன் மீண்டுவிட்டான்.

அந்தப் புத்தகம் என்ன தெரியுமா? மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’.

நம்பிக்கையுடன் திங்களன்று மீண்டும் படிக்க தொடங்குகிறான். மீண்டும் பரிட்சை எழுதுகிறான். தேர்வு பெறுகிறான். அடுத்தடுத்த கல்லூரி சென்று வழக்கறிஞராகி, இன்று நீதிபதியாக உயர்ந்துள்ளான் அவன். அவன் வேறுயாருமில்லை! நான் தான்.

தற்கொலை தான் தீர்வு என நினைத்து சிறு தோல்வியில் நான் அன்று துவண்டிருந்தால், இன்று இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது. தோல்வியே வெற்றியின் முதல் படி. தோல்வி பெறாதவர் வாழ்க்கையை கற்க முடியாது! இதை உங்களுக்கு உணர்த்த, என் வாழ்வையே உங்களுக்கான உதாரணமாக சொல்ல நான் விழைகிறேன்.

மாணவர்களே, தோல்வியை கடந்து வாருங்கள். தோல்விக்கான தீர்வு, தற்கொலை அல்ல”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com