செய்தியாளர்: K.அரிபுத்திரன்
திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்மா (60) - துரைசாமி (70) தம்பதியர் இவர்கள் இருவரும் நேற்று பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று விட்டு மீண்டும் பஸ்ஸில் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது மத்தூர் அருகே பத்மா பையில் வைத்திருந்த ரூ.27 ஆயிரம் பணம் 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மா மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப் பதிவு செய்து உடனடியாக தனிப்படை எஸ்.ஐ சீனிவாசன் தலைமையில் போலீசார் பேருந்தில் சோதனை செய்துள்ளனர் .சோதனையில் இரு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பீனன் (35) நந்தினி (35) ஆகிய இருவரும் சேர்ந்து பத்மாவின் பையில் இருந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நந்தினியை சேலம் மகளிர் சிறையிலும், பீனனை தர்மபுரி மாவட்ட சிறையிலும் அடைத்தன. இந்த சம்பமவ் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.