அலெக்ஸாண்டர் சாம்சன்
அலெக்ஸாண்டர் சாம்சன் Pt Desk
குற்றம்

திருச்சி: பாம் போடுவதாக மிரட்டி கல்லை தூக்கி போட்ட நபர் - அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி?

PT WEB

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முத்தையன். இவருக்குத் தொட்டியம் அருகே உள்ள செவந்தி பட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் இருக்கும் மலையடிவாரத்தில் மர்ம நபர் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாகத் தகவல் சென்றுள்ளது. பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மரங்களுக்கு இடையே ஒருவர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்துள்ளார். அவரிடம் காவலர்கள் நெருங்கிச் சென்றபோது அந்த நபர், "யாரும் கிட்டே வராதீர்கள், வந்தால் சுட்டு விடுவேன், பாம் போட்டு விடுவேன்" என்று போலீசாரை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் அவர் அருகே நெருங்கிச் சென்றுள்ளனர். அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த பொருளை பாம் என்று கூறி தூக்கி வீசியுள்ளார். அது தொட்டியம் காவல்நிலைய காவலர் ராஜேஷ் குமார் இடது தோள்பட்டையில் விழுந்து காயம் ஏற்பட்டது. பின்னர் அது,பாம் இல்லை பெரிய கல் என்று தெரியவந்தது.

பின்னர் அந்த நபர் போலீஸார் மீது துப்பாக்கியை நீட்டிச் சுட முயன்றுள்ளார். அப்போது காவல் காவல் ஆய்வாளர் முத்தையன் தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்குக் கீழ் சுட்டுள்ளார். கீழே விழுந்த அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் சாம்சன் என்பதும், இவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து காயமடைந்த அலெக்ஸாண்டர் சாம்சனை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் காயமடைந்த காவலர் ராஜேஸ் குமார் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் விசாரணை மேற்கொண்டார்.