மேற்கு வங்கம்
மேற்கு வங்கம் முகநூல்
குற்றம்

மனைவின் தலையை துண்டாக்கி கையில் எடுத்து வலம் வந்த கணவர்! மேற்குவங்கத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம்

ஜெனிட்டா ரோஸ்லின்

மேற்குவங்கத்தில் தன் மனைவி திருமணத்தை மீறிய உறவு கொண்டிருப்பதாக சந்தேகித்த கணவர், மனைவின் தலையை துண்டாக்கி கையில் எடுத்து வலம்வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பதாஷ்பூரில் கௌதம் குச்சாய்த் மற்றும் அவரது மனைவி பூல்ராணி என்பவர் வசித்து வருந்தனர். கௌதம் குச்சாய்த் என்பவர் ஒரு நடைபாதை வியாபாரி. இவர்களுகு 1 ஆம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை உள்ளது.

இந்தவகையில் கடந்த சில நாட்களாகவே கௌதம் குச்சாய்க்கும் அவரது மனைவிக்குமிடையே மனகசப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெகுநாட்களாக தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டுள்ளாரோ? என்று சந்தேகித்து வந்துள்ளார் கௌதம்.

இந்நிலையில் சந்தேகம் முற்றிய கௌதம் கடந்த புதன்கிழமை அன்று கொடிய கூர்மையான வாளைக்கொண்டு தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், கொலை செய்த மனைவியின் தலையையும் அதற்கு பயன்படுத்திய ஆயுதத்தினையும் கையில் ஏந்தி கொண்டு , அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று அங்கிருந்த இருக்கையில் தலையையும், வெட்ட பயன்படுத்திய வாளினையும் தனது இரண்டு புறமும் வைத்து அமர்ந்துள்ளார்.

இதனை கண்ட ஊர்மக்கள் காவல்துறைக்கு இது குறித்து தெரிவிக்கவே, அங்கு வந்த பதாஷ்பூர் காவல் நிலைய காவல்துறையினர் அவரை கைதுசெய்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதனை கண்ட கிராம மக்கள் இது குறித்து தெரிவிக்கையில், “அவர் வன்முறையான மனநிலையில் இருந்தார். யாரும் அவருக்கு அருகில் செல்ல துணியவில்லை.” என்று தெரிவித்தனர்.

இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.