பிரசன்ன குமார்
பிரசன்ன குமார் புதியதலைமுறை
குற்றம்

திண்டுக்கல்: காதலர்கள் முன்பு சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய ரவுடி கைது!

PT WEB

செய்தியாளர் - ரமேஷ் 

திண்டுக்கல் அருகே 19 மற்றும் 17 வயதுடைய 2 சகோதரிகளை கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்றது. தொடர்ந்து, தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளின் காதலர்கள் முன்பே அவர்களை கட்டிப்போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

4 பேர் சேர்ந்து 2 சிறுமிகளையும் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு, ‘நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம்’ என்றும் மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுமிகளை வன்கொடுமை செய்த விவகாரத்தில் சரண்குமார், வினோத்குமார், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் ஆலோசனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். வத்தலகுண்டு நான்கு வழிச்சாலை பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீஸார் திங்கட்கிழமை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பொன்மாந்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்னகுமார் மீது 5 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்ளன. இதனைத்தொடர்ந்து, போலீஸார் அவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.