குற்றம்

தஞ்சை புதுக்கோட்டை எல்லையில் அதிகாலை முதலே மதுவிற்பனை... நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

webteam

தஞ்சை புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள அரசு மதுபான கடை, சட்டவிரோதமாக அதிகாலை முதலே திறக்கப்பட்டு, அப்போது முதல் மது விற்பனை நடைபெற்றுவருகிறது. பல நாள்களாக நடக்கும் இந்த விஷயம் குறித்து புகார் தெரிந்தும், காவல் துறை கவனிக்காமல் இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இனியாவது இதனை தடுக்க காவல்துறை தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கைகாட்டி என்ற கிராமத்திலுள்ள அரசு மதுபான கடையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளலெல்லாம் இப்படி நடந்துவருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பல நாள்களாக நடப்பதாக சொல்லப்படும் இச்சம்பவம், இன்றும் கைகாட்டி - பேராவூரணி சாலையிலுள்ள கடையில் நடந்தது. பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமுள்ள இடத்திலேயே உள்ள ஒரு மதுபான கடையில், இரு நபர்கள் சட்டவிரோதமாக அதிகாலையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த டாஸ்மாக் கடைக்கு சென்ற வாடிக்கையாளர்களில் பத்துக்கும் மேற்பட்டோர், மதுபாட்டில்களை வாங்கி அங்கேயே குடித்துவிட்டு சென்ற காட்சி காண்போருக்கு வேதனையையும் தொந்தரவையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மக்கள் தெரிவிக்கையில், “இதேபோலத்தான் நாள்தோறும் இரவு மற்றும் அதிகாலையில் சட்ட விரோத மதுவிற்பனை நடக்கிறது. இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இனியாவது காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு இது போன்ற சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்” என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.