Published : 15,Nov 2021 01:24 PM

ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விடாது - நீதிபதிகள் கருத்து

Madurai-high-court-branch-justice-opinion-about-shutting-a-Tasmac

ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் அரசுக்கு ஒன்றும் பெரிய இழப்பு ஏற்பட்டு விடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த கிருபா என்பவர் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மெஞ்ஞானபுரம் பேருந்து நிலையம் அருகில் பஜாரின் மையப்பகுதியில் டாஸ்மாக் மது விற்பனைக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினசரி பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மது அருந்துபவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மது விற்பனை கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடையை இடம் மாற்றக்கோரி நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் தாசில்தார் தலைமையில் மே 2020 அன்று நடந்தக் கூட்டத்தில் மேற்படி கடையை ஆறு மாதத்திற்குள் இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் ஒப்புக் கொண்டார். ஆனால், இதுவரை கடையை இடமாற்றம் செய்யவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

image

இந்த மனு இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் கடையை இடமாற்றம் செய்ய கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து நீதிபதிகள், “ஒரு கடையை இடமாற்றம் செய்ய எவ்வளவுநாள் கால அவகாசம் எடுப்பீர்கள்? ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் கால அவகாசம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ஒரு மதுபானக் கடையை மூடுவதால் அரசுக்கு ஒன்றும் பெரிய இழப்பு வந்துவிடாது” என கூறிய நீதிபதிகள், “இரண்டு நாட்களுக்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்; இல்லையென்றால் கடையை மூடி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் கடையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்படும்” என எச்சரித்து வழக்கு விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்