செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் பெட்டமுகிலாளம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான இரு சிறுமியர் குழந்தை திருமணத்தின் மூலம் கர்ப்பமடைந்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் பதிவு செய்யும் போது, குழந்தை திருமணம் நடந்தது தெரிந்துவிடும் என்பதால் இரு சிறுமியரின் ஆதார் கார்டுகளில் உள்ள பிறந்த ஆண்டை உறவினர்கள் மாற்ற ஏற்பாடு செய்தனர்.
அதற்காக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கடை வைத்துள்ள முகமது ஜலால் உல்லா (33) என்பவரை தொடர்பு கொண்டனர். அவரும் பிறந்த ஆண்டை மாற்றி போலியாக ஆதார் கார்டை தயார் செய்து கொடுத்துள்ளார். போலி ஆதார் கார்டு மூலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பதிவு செய்து மகப்பேறு உதவித்தொகை சிறுமிகளுக்கு பெற்றது தெரியவந்தது. இதே போல ராயக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு உதவித்தொகை பெற ஆதார் கார்டில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் ரஞ்சித் வயதை மாற்றிக் கொடுத்ததும் தெரியவந்தது.
இதையறிந்த கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை காவல் நிலையங்களில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஜலால் உல்லா மற்றும் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் ரஞ்சித் ஆகியோரை கைது செய்த போலீசார், இதில் தொடர்புள்ள சிறுமிகளின் உறவினர்கள் சிலரை தேடி வருகின்றனர்.