ரிஜோ, ஜோய்,
ரிஜோ, ஜோய், கேரளா
குற்றம்

‘சொன்ன நேரத்துக்கு ஏன் எழுப்பல’ - 15 நிமிஷம் தாமதமாக எழுப்பிய தந்தை; மகனின் செயலால் நடந்த துயரம்!

சங்கீதா

பொதுவாக குடும்பங்கள் என்றாலே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், அதுவே கைகலப்பாகி எல்லை மீறும்போது, விபரீதத்தில் முடிந்த சம்பவங்களும் ஆங்காங்கே அவ்வப்போது நடப்பது உண்டு. அவ்வாறு, கேரளாவில் பெற்ற மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழந்துள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் கோடனூரைச் சேர்ந்தவர் 60 வயதான ஜோய். இவரது மனைவி ரினா. இந்த தம்பதிக்கு ரிஜோ என்ற மகனும், அலீனா என்ற மகளும் உள்ளனர். 25 வயதான மகன் ரிஜோ, அங்குள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்ததும், மது அருந்திவிட்டு 5 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார் ரிஜோ. பின்னர் உறங்கச் செல்வதற்கு முன், தன்னை இரவு 8.15 மணிக்கு எழுப்பும்படி பெற்றோரிடம் கூறிவிட்டு போதையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார் ரிஜோ.

ஆனால், மகன் ரிஜோ கூறியப்படி அவரது பெற்றோர் அவரை இரவு 8.15 மணிக்கு பதில், 15 நிமிடங்கள் தாமதமாக 8.30 மணிக்கு எழுப்பியுள்ளனர். அப்போது தூக்கத்திலிருந்து எழுந்து கடிகாரத்தைப் பார்த்த ரிஜோ, இரவு 8.30 மணி என்றதும், தான் சொன்ன நேரத்தில் ஏன் எழுப்பி விடவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருக்கட்டத்தில், இந்த சண்டைக் குறித்து தந்தை ஜோய், மகன் ரிஜோவிடம் ஏன் இவ்வாறு கத்தி கூச்சல் போடுகிறாய் என்று கேள்வி எழுப்பியதும்தான் தாமதம். இதனால் ஆத்திரமடைந்த மகன் ரிஜோ, கேள்வி கேட்ட தந்தையை முரட்டுத்தனமாக கீழேதள்ளி, அவரது தலையிலேயே கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தந்தை ஜோய், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ஏற்கனவே ஜோய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகன் ரிஜோ, தானே போலீசாருக்கு அழைத்து தந்தையை தாக்கிய சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததையடுத்து, போலீசார் விரைந்து சென்று அவரை கைதுசெய்தனர். பின்னர், ரிஜோவை விசாரைணைக்கு உட்படுத்திய போலீசார், தொடர்ச்சியாக அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்பதை உறுதி செய்துள்ளனர். 15 நிமிடங்கள் தாமதமாக எழுப்பியதற்காக மகனே, தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.