செய்தியாளர் - ராஜ்குமார்.ர
உயர் பாதுகாப்பு கொண்ட இடங்களில் விமான நிலையங்களும் அடங்கும். பயணிகள் பல்வேறு கட்டப் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் இன்று காலை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் IX-1810 விமானத்தில் தனது மனைவியுடன் பயணம் செய்வதற்காக பயணி ஒருவர் வந்துள்ளார். அப்போது, தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக அவர் பாதுகாப்புப் பணியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சோதனைப் பணியாளர்கள், அவரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர்.
அப்போது, திடீரென அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அங்கு சரக்கு கையாளுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பரிசோதகர்கள் மீது பட்டு அவர்கள் காயமடைந்துள்ளனர். உடனடியாக காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரையும் அவரது மனைவியையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல கட்டப் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெறும் விமான நிலையத்திற்குள் துப்பாக்கியை அவர் எவ்வாறு கொண்டு வந்தார்? அவருக்கு விமான நிலையப் பணியாளர்கள் யாரேனும் உதவி செய்தார்களா? எந்த நோக்கத்திற்காக துப்பாக்கியை விமான நிலையத்திற்குள் கொண்டு வந்தார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து வாரணாசி விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளிடம் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.