செய்தியாளர்: அ.ஆனந்தன்
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக விவசாய கிருமிநாசினி பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் வேலணை வள்ளிக்காடு, கல்லுண்டாய்முனை கடற்கரையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான நூற்றுகணக்கான விவசாய கிருமி நாசினிகளை சிறப்பு அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், விவசாய கிருமி நாசினிகளை தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி வரப்பட்டதும், பின் நடுக்கடலில் பைபர் படகு மூலம் இலங்கை கடல் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.