Accused
Accused pt desk
குற்றம்

திண்டுக்கல்: நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி - MBA பட்டதாரி இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள்!

webteam

செய்தியாளர்: ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள தனியார் தங்க நகை கடன் நிதி நிறுவனத்தை திறக்க வழக்கம் போல் இன்று காலை ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது திடீரென மேல் மாடியில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர், தான் கையில் வைத்திருந்த ஆயுதத்தை, பெண் ஊழியர் ஒருவரின் கழுத்தில் வைத்து நான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ஊழியர்கள் அவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கினர்.

Accused

இதையடுத்து தான் கொண்டு வந்திருந்த வயர் மூலம் ஊழியர்களை கட்டிப்போட்டு விட்டு அவர்களிடமிருந்த சாவியை வாங்கி, கதவை திறக்க முற்பட்டுள்ளார். அப்போது, சாவியை மாற்றிப் போட்டதால் அலாரம் அடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தப்பியோடியுள்ளார். சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் இளைஞரை விரட்டத் தொடங்கினர். கையில் கட்டுடன் ஊழியர்கள் இளைஞரை விரட்டுவதைப் பார்த்த பொதுமக்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோட முயன்ற அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அந்த இளைஞர், கொடைரோடு மெட்டூர் பகுதியைச் சேரந்த பாண்டி என்பவரது மகன் அமர்நாத் (28) என்பதும் இவர் நேற்றிரவே கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததும். அந்த முயற்சி பயனளிக்காததால் ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

நிதி நிறுவனம்

டேக்வாண்டோ (Taekwondo) வீரரான அமர்நாத், எம்.பி.ஏ பட்டதாரி என்பதும் தனது தாயார் பெற்ற ரூ.20 லட்சம் கடனை அடைப்பதற்காக நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றதாக அமர்நாத் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் நிதி நிறுவனத்தில் இருந்த சுமார் 4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியது. இச்சம்பவத்தால் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.