Police station pt desk
குற்றம்

திண்டுக்கல் | உரிமையாளர் மர்ம மரணம்: தோண்டி எடுக்கப்பட்ட உடல் - விசாரணையில் சிக்கிய சிறுவன்

திருட்டை மறைக்க உரிமையாளருக்கு விஷம் வைத்த சிறுவன் - 2 நாட்களுக்குப் பின் தோண்டி எடுக்கப்பட்ட உடல் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை...

PT WEB

செய்தியாளர்: திவ்யஸ்வேகா

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ள நிலையில், மலையடிவாரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 14 ஏக்கர் தோட்டத்தை மாரியப்பன் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி திடீரென தோட்டத்து வீட்டில் மாரியப்பன் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த அவரது மகன் உறவினர்களுக்கு தகவல் சொல்லி தனது தந்தையின் உடலை அடக்கம் செய்தார். மேலும் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், மாரியப்பனிடம் பணியாற்றிய 17 வயது சிறுவனிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த சிறுவன் 6.5 பவுன் நகையை திருடியதை மாரியப்பன் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயத்தில் பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துக் கொன்றதாக தெரிவித்துள்ளான்.

நகையை திருடியதை மறைப்பதற்காக சிறுவன், உரிமையாளருக்கு குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் விசாரணையில் வெளியான நிலையில், வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.