பெண் சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் போலீசார்
பெண் சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் போலீசார் file image
குற்றம்

திருப்பூர் அரசுப் பள்ளி வளாகத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் - மாணவர்கள் அதிர்ச்சி!

PT WEB

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கே.செட்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்பொழுது இந்த பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வு அறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்குவதற்காகப் பள்ளி வளாகத்தின் பின்புறம் தகரக் கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். அப்போது புதிதாகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் பள்ளியில் பணி புரியும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் அங்குச் சென்று பார்த்த போது பணியாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைக்குள் 35 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இறந்து போன பெண்ணை வேறு இடத்தில் கொலை செய்து இங்குக் கொண்டு வந்து போட்டுள்ளார்களா? அல்லது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா ? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முடிவில்தான் தெரியவரும் என்றும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி வளாகத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.