செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தனராசு, தனது வாகனத்தை கடைத்தெரு பகுதியில் நிறுத்திவிட்டு காய்கறி வாங்கச் சென்றுள்ளார். இதையடுத்து திரும்ப வந்து பார்த்தபோது அவரது TVS - XL வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சேத்தியாதோப்பு கடைவீதியில் சதேகப்படும் வகையில் நடமாடிய நபரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் பண்ருட்டி அருகே உள்ள கங்கணம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (35) என்பது தெரியவந்தது.
இவர் சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, காடாம்புலியூர், கடலூர், வடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் TVS - XL இருசக்கர வாகனங்களை திருடிச் சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர் மீது வழக்குப் பதிந்த 10 TVS - XL வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.