இணைய வழி மோசடி - இருவர் கைது pt desk
குற்றம்

சென்னை: இணைய வழி மூலம் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.38 லட்சம் மோசடி - இருவர் கைது

இணைய வழி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகளில் தொடர்புடைய 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.46 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி (62). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான இவரது செல்போனுக்கு கடந்த ஜூலை மாதம் மும்பை இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாகவும், உங்களது பெயரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளதாகவும், உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறும் கூறி உள்ளனர்.

இதையடுத்து அவரை மிரட்டி அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மேரி ஜெனட் டெய்சி, அவர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு ரூ.38 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். இந்நிலையில், அவருக்கு மும்பை இணைய வழி குற்றப்பிரிவில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மேரி ஜெனட் டெய்சி, ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிஜாய் (33) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் 13 வங்கிக் கணக்குகளை தொடங்கி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து பிஜாய் மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னை, மண்ணடி பகுதியைச் சேர்ந்த முகமது இலியாஸ், புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சாதிக் பாட்சா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.46.22 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் இவர்கள் இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.