செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அம்பத்தூர் ஒ.டி பேருந்து நிலையம் அருகே பிரபல தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ளேயே, ஏ.டி.எம் மற்றும் சி.டி.எம் இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில், நள்ளிரவு, 12.45 மணியளவில், ஏ.டி.எம்-க்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், இயந்திரத்தின் அடிப்பகுதியை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.
இந்த கொள்ளை முயற்சி ஹரியானாவிலுள்ள தலைமை அலுவலத்திற்கு தெரிய வரவே, அவர்கள் கிளை மேலாளர் சுதாகர் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த அந்நபரை அடையாளம் கண்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.