செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை ஏழுகிணறு சேவியர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 17 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 17 வயது அடையாளம் இளஞ்சிறார் ஒருவர், சிறுவனை முக்கிய விஷயம் பேச வேண்டும் ஆகையால் நேரில் வருமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் (16ம் தேதி) மீண்டும் அந்த 17 வயது சிறுவன், பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுவனுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி நேரில் வா உன்னிடம் பேச வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுவன் அன்று இரவு தனது உறவினரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இன்ஸ்டா நண்பர் கூறியது போல் முத்தையால்பேட்டை மதுரவாசல் தெருவில் உள்ள ஒரு டீக்கடை அருகே காத்திருந்துள்ளார்.
அப்போது டீக்கடையில் இருந்த அடையாளம் தெரியாத ஒரு இளைஞர், அவசரமாக செல்ல வேண்டும் எனக் கூறி சிறுவனிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். இதையடுத்து சிறிது தூரம் சென்றதும் அங்கு நின்றிருந்த ஆட்டோ முன்பு நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். சிறுவன் பைக்கை நிறுத்தியவுடன் அந்த நபர் மற்றும் ஆட்டோவில் இருந்த மூன்று நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சிறுவனை ஆட்டோவில் கடத்திச் சென்று ஸ்டான்லி மருத்துவமனை பின்புறம் உள்ள தண்டவாள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிறுவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணமும், 100 கிராம் தங்க நகையும் கொடுக்க வேண்டும் என்று கூறி சிறுவனை அழைத்து வந்து அதே இடத்தில் இறக்கி விட்டு விட்டு நான்கு நபர்களும் ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தன் பேரில், பெற்றோர் முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வசந்த் (எ) வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர்களான ரஞ்சித், பரத் ஆகியோர் மாணவனை கடத்தி மிரட்டியது தெரியவந்தது. மேலும், பள்ளி மாணவனை டீக்கடைக்கு வரவழைத்த இணாடாவில் அறிமுகமான 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வசந்த் மற்றும் அவரது நண்பர்கள் மாணவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும், அந்த வகையில்இன்ஸ்டா மூலம் பழகிய மாணவனை டீக்கடைக்கு அழைத்து பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வசந்தகுமார் என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைம்றைவாக உள்ள மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.