செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவில் முத்தாபுதுப்பேட்டை ஐசிஎப் காலனி பகுதியைச் சேர்ந்த முரளி (49) என்பவர் கடந்த 5ஆம் தேதி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், முத்தாப்புதுபேட்டை அடுத்து மிட்டனமல்லியில் வசித்து வரும் எனது தங்கை சரிதா, அவரது வீட்டின் அருகே வசிக்கும் சாய்லட்சுமி (48), எஸ்பிஐ வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து வரும் அவரது கணவர் சாமிசந்தர் (56) ஆகியோருக்கு அவசர தேவைக்காக பணம் கொடுத்து உதவி செய்தேன்.
இவர்கள் மூலம் பெங்களுாருவைச் சேர்ந்த சுபத்ரா (35) அவரது கணவர் பாலகண்ணன் (44) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து சாய்லட்சுமி அவரது தோழியான சுபத்ரா என்பவருடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறினார். இதனால் நான், எனது மனைவி எனது தங்கை, எனது நண்பர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு கட்டி வந்தோம்.
ஆனால், நாங்கள் கட்டிய சீட்டுப் பணம் 1,26,76,268 ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் ஆல்பி பிரிஜிட் மேரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுபத்தரா, பால்கண்ணன், சாய்லட்சுமி, சாமிசந்தர் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவிக்குமாரை போலீசார் தீவிரமக தேடி வருகின்றனர்.