சம்பவ இடத்தில் போலிசார்
சம்பவ இடத்தில் போலிசார் PT
குற்றம்

”நாயை கட்டிவையுங்கள்” என்று சொன்ன நபரை அடித்தே கொலை செய்த நாயின் உரிமையாளர்! ஆக்ராவில் அதிர்ச்சி!

Jayashree A

ஆக்ராவில் வளர்ப்பு நாயை கட்டிப்போட்டு வையுங்கள் என்று கூறியதற்காக, நாயுடைய உரிமையாளரின் குடும்பத்தினர் அவரை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ராவில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் 32 வயதான ஜாக்கி பாகெல். இவருக்கு பக்கத்து வீட்டில், குத்துச்சண்டை வீரரான ராகேஷ் சிங் மற்றும் அவரது உறவினர்கள் வசித்து வந்துள்ளனர்.

ராகேஷ் சிங் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜாக்கி பாகெல்லை அந்த நாயானது கடிக்க முற்பட்டுள்ளது. ஆனால் அதனிடமிருந்து ஜாக்கி பாகெல் தப்பியிருக்கிறார். இருப்பினும், வளர்ப்பு நாயானது வழிப்போக்கர்களை இலக்கு வைத்து தாக்கி வந்துள்ளது.

நாயின் இந்த போக்கை ராகேஷிடம் கூறி நாயை கட்டிப்போட்டு வைக்குமாறு ஜாக்கி கூறவும், இவ்விவகாரத்தில், ராகேஷ்சிங் குடும்பத்தாருக்கும் ஜாக்கி பாகெல்க்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் குத்துச்சண்டைவீரரான ராகேஷ் சிங், ஜாக்கி பாகெல்லை தாக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் ராகேஷின் உறவினர்களும் சேர்ந்து ஜாக்கி பாகெல்லை தடி மற்றும் கம்பிகளால் தாக்க ஆரம்பித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜாக்கியை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து இருக்கிறார் .

சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் தப்பி ஓட முயன்ற ராகேஷ் சிங் மற்றும் உறவினர்கள் நால்வரை கைது செய்ததுடன், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி யை ஆய்வு செய்த போலிசார் ராகேஷ் சிங் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.