செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை பல்லாவரம் பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு கண்காணித்த போது சந்தேகிக்கும் படி இருந்த வடமாநில நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த பிஸ்ரபா பல்வர்சிங் (26), சந்தன் பலியர்சிங் (27), அஞ்சனா டிகல் (40), என்பது தெரியவந்தது. இவர்கள் ஒடிசா மாநிலம் பள்ளிகொண்டாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.