மமிதா பைஜூ, இயக்குநர் பாலா
மமிதா பைஜூ, இயக்குநர் பாலா pt web
சினிமா

வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகியது ஏன்? மமிதா பைஜூ மீண்டும் விளக்கம்

Angeshwar G

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இத்திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த நிலையில், கருத்துவேறுபாடுகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அருண்விஜய் நடித்து திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மமிதா பைஜூ, பாலா

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட நடிகை மமிதா பைஜூ, தான் விலகிய வணங்கான் திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அதில், “வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன்; அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன்; திடீரென அவர் (இயக்குநர் பாலா) என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை, அதனால் பதற்றமாகிவிட்டேன். அச்சமயம் எனக்கு பின்னாலிருந்த அவர் (பாலா) என்னை தோள்பட்டையில் அடித்தார்.

‘நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என அவரே (இயக்குநர் பாலா) செட்டிலேயே சொல்லிவிடுவார்... சிலசமயங்களில் அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன். சூர்யா சார், ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் அவர் எப்படியென தெரிந்துவைத்திருந்தார். புதிதாக இணைந்ததால் எனக்குத்தான் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த காணொளி வேகமாக பரவியது. இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் இயக்குநர் பாலாவிற்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் நடிமை மமிதா பைஜூ தன் இன்ஸ்டா பக்கம் மூலம் மீண்டும் விளக்கமொன்றை கொடுத்துள்ளார். அதில், “எனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. திரைப்பட ப்ரமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி, பொறுப்பற்ற தலைப்பின் மூலம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் என ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்துள்ள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார். அந்தப்படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ எவ்வித தவறான அனுபவங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில்ரீதியான கமிண்மெண்ட்டுகள் காரணமாகவே அந்தப்படத்தில் இருந்து விலகினேன்” என தெரிவித்துள்ளார்.