விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் தான் கடந்த சில வருடங்களாகவே டிரெண்டிங். நேற்று அதிகாரபூர்வமாக இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளனர். `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இருவரும் சில வருடங்களாகவே காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இதை இருவருமே எங்கும் மறுக்கவில்லை, அதே சமயத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் இல்லை. 2024ல் இருந்து இருவருமே சில பேட்டிகளில், பதிவுகளில் தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், காதலில் இருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் நேற்று (பிப். 26) உதய்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு Virosh எனப் பெயரையும் அறிவித்தது இந்த ஜோடி. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் வெவ்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் குடும்ப முறைப்படியும் திருமணம் நடந்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா, கொடவா இனத்தை சேர்ந்தவர். எனவே நேற்று அதிகாலையில் கொடவா முறைப்படி ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம் நடந்ததுள்ளது. விஜய் தேவரகொண்டா, தெலங்கானாவை சேர்ந்தவர். இதனால் காலை 10.10 மணியளவில் இவர்களின் திருமணம் மீண்டும் தெலுங்கு இந்து முறைப்படி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
நேற்று மாலை திருமணப் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றது இந்த தம்பதி. மேலும் திருமணம் குறித்து விஜய் தேவரகொண்டா "ஒரு நாள், நான் அவளின் இன்மையை உணர்ந்தேன். அவள் என்னுடன் இருந்தால் என் நாள் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவள் என் எதிரே இருந்திருந்தால் என் சாப்பாடு இன்னும் முழுமையாக இருக்கும் என தோன்றியது. என்னுடைய உடற்பயிற்சிகளின் போது அவளும் என்னுடன் துணைசேர்ந்தால், அது ஒரு தண்டனையைப் போல் அல்லாமல் இருக்கும் என்பதை போல தோன்றியது. எங்கே இருந்தாலும் அது என் வீடு போலவும், அமைதியாகவும் உணர அவள் எனக்கு தேவை. எனவே என் சிறந்த தோழியை என் மனைவியாக்கிக் கொண்டேன்." எனப் பதிவிட்டார்.
ராஷ்மிகா மந்தனா வெளியிட்டிருக்கும் பதிவில், " என்னுடைய கணவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், திரு. விஜய் தேவரகொண்டா. உண்மையான அன்பு, அமைதி என்றால் என்ன என்பதை எனக்குக் காட்டியவர். பெரிய கனவுகளைக் காண்பதில் தவறே இல்லை என்று தினமும் என்னிடம் சொல்பவர். நான் நினைத்துப் பார்ப்பதை விடவும் என்னால் இன்னும் உயரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்று தொடர்ந்து எனக்கு நம்பிக்கை அளிப்பவர். நண்பர்களுடன் பயணம் செய்வதுதான் உலகின் மிகச்சிறந்த விஷயம் என்பதை எனக்குப் புரிய வைத்தவர். இன்று நான் எந்த மாதிரியான பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அந்தப் பெண்ணாக நான் மாறியிருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள் தான்! நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள்.
உன் மேல் நான் வைத்திருக்கும் உணர்வுகளை விவரிக்க எனக்கு எப்போதும் வார்த்தைகள் போதாது. இப்போது எனது வெற்றிகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, துக்கம், வாழ்க்கை என எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது - ஏனென்றால் இவை அனைத்திற்கும் சாட்சியாக, இவை அனைத்திலும் ஒரு பெரிய அங்கமாக நீ என்னுடன் இருக்கிறாய். உன் மனைவியாகப் போகிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! உன் மனைவியாக அழைக்கப்படுவதை எண்ணி பெருமை கொள்கிறேன். இனி கொண்டாட்டக் காலம் தான்!" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். வருகிற மார்ச் 4ம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.