பெண்மையின் வலிமை பேசும் முற்போக்கான படம்! - தாய் கிழவியை பாராட்டிய ஜோதிகா
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' திரைப்படம் பெண்மையின் வலிமையை அழகாக வெளிப்படுத்துகிறது. ஜோதிகா இப்படத்தை பாராட்டி, இது மனதைத் தொடும் feel good படம் என்றும், சமூகத்துக்கு முக்கியமான செய்தியை கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராதிகாவின் நடிப்பு, காமெடி, மற்றும் கதையின் முற்போக்கு பார்வை பாராட்டத்தக்கது.
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், ரெபேக்கா எனப் பலரும் நடித்துள்ள படம் `தாய் கிழவி'. நாளை (பிப்ரவரி 27) இப்படம் வெளியாகவுள்ளது. நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தை சூர்யா, ஜோதிகா உட்பட பல பிரபலங்கள் பார்த்தனர்.
இப்படத்தை பாராட்டி இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ள ஜோதிகா "பெண்மையின் சாரத்தையும் வலிமையையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது! மனதைத் தொடும் feel good படம், மிக முக்கியமாக முற்போக்கான படம். சிவக்குமார் முருகேசன், இதுதான் உங்கள் முதல் படமா? நம் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமான செய்தியை சொல்லியிருக்கிறீர்கள். மிக கண்ணியமான நகைச்சுவையுடனும், எளிமையுடனும் ஒரு பெண்ணாக உங்கள் கதையைப் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. உங்கள் சிந்தனை முறை உங்கள் குணத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. சிவகார்த்திகேயன், ராதிகா போன்ற ஒரு சக்திவாய்ந்த திறமைசாலிக்கு உண்மையிலேயே அவருக்கு தகுதியான மேடையை வழங்கியதற்கு நன்றி, வயது தடையை மீறி ஒரு பெண்ணையும் அவரது தூய திறமையையும் பற்றிய படத்தை உருவாக்கியதற்கு நடிகைகளின் சார்பாக நன்றி. உங்கள் நட்சத்திர சக்தியைக் கொண்டு பெண்களுக்கு இவ்வளவு முக்கியமான ஒரு படத்தை ஆதரித்ததற்கு நன்றி.
ராதிகா, நீங்கள் என்னை பிரமிக்க செய்கிறீர்கள். ரொம்பவே ஊக்கமளிக்கிறீகள். இந்தப் பாத்திரத்துக்காக உடல் ரீதியாக எவ்வளவு கடின உழைப்பு கொடுக்கப்பட்டிக்கிறது என கற்பனை கூட செய்ய முடியவில்லை. தாய் கிழவி சக்தி வாய்ந்தவர், புத்திசாலி மட்டுமல்ல, அழகானவர், திரைக்கு வெளியே இருக்கும் ராதிகாவை அவர் பிரதிபலிக்கிறார். உங்கள் உடல் மொழி, ஸ்டைல், அப்பாவித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு, வசனம், சின்ன சின்ன சைகைகள் மூலம் எங்கள் இதயங்களை கொள்ளையடித்துவிட்டீர்கள். அது உங்களை ஒரு நடிகையாக தனித்துவமாக காட்டுகிறது! எனக்கு தாய் கிழவி வெறும் பெண்களை மையப்படுத்திய பொழுதுபோக்கு படம் அல்ல. இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம். பெருமைப்படுங்கள் தாய் கிழவி குழு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

