யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள படம் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. ராயா என்ற அப்பா ரோல் மற்றும் டிக்கெட் என்ற மகன் என இரு ரோலில் யஷ் நடித்துள்ளா இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் முதலில் மார்ச் 19 வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. பிறகு படம் ஏப்ரல் 10ம் தேதிக்கு தள்ளிப் போனது, பின்னர் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிப்போனது. இப்போது ஜூன் 4ம் தேதி படம் வெளியாகாது என அறிவிப்பை வெளியிட்டுள்ளார் யஷ். அந்த அறிவிப்பில் "நாங்கள் உருவாக்கும் படங்கள் சில உண்டு; பிறகு, சினிமா மீது நாம் ஏன் காதல் கொண்டோம் என்பதை நமக்கு நினைவூட்டும் படங்களும் சில உண்டு. 'டாக்ஸிக்' அத்தகைய ஒரு பயணமாகவே அமைந்தது. CinemaCon மாநாட்டில் எங்கள் படத்தைத் திரையிட்டு, உலகளவில் கிடைத்த அமோகமான வரவேற்பைக் கண்டது, இந்தப் படம் உலகெங்கிலும் அதன் முழுமையான ஆற்றலை அடையத் தகுதியானது என்ற எங்கள் நீண்டகால நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
'டாக்ஸிக்' திரைப்படம் நிறைவடைந்துவிட்டது, தற்போது நாங்கள் உலகளாவிய விநியோகம் மற்றும் பங்குதாரர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் காரணமாக, எங்கள் வெளியீட்டு கால அட்டவணையை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம். முன்னதாக அறிவித்தபடி ஜூன் 4 அன்று இப்படம் வெளியாகாது என்றாலும், பிற்காலத்தில் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தேதியில் வெளியிடப்படும். 'டாக்ஸிக்' திரைப்படம் விரைவில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளுக்கு வரும். இந்திய சினிமா தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கண்டறிந்து, மிகுந்த நம்பிக்கையுடன் உலக அரங்கில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், அதன் தரத்தை உயர்த்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
ஒரு நடிகர்-தயாரிப்பாளராக, நமது திரைப்படம் அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்துடன் உலகைச் சென்றடைவதை உறுதிசெய்ய நேரம் ஒதுக்குவதன் மூலம், இந்தியத் திரையுலகிற்கும் நம் அனைவருக்கும் எனது பங்களிப்பைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தருணத்தை நான் காண்கிறேன். ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மாற்றத்திலும் உங்கள் ஆதரவு என்னுடன் நிலைத்திருக்கிறது, அதை நான் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் போற்றுகிறேன். சில கதைகளுக்குப் பொறுமை தேவை. சில பயணங்களுக்கு அது அவசியமாகிறது. நீங்கள் ரசித்துக் கொண்டாடும் ஒரு திரைப்படத்தை உங்களுக்கு வழங்குவோம் எனவும், இந்தியத் திரையுலகிற்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகத் திகழும் ஒரு திரைப்படமாக அது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார் யஷ்.