இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர் இந்திய திரையுலகமே அதிகம் எதிர்பார்க்கும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு இசை அனிருத் தான். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் புரோமோ வீடியோவில் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட "அது எனக்கும் நெல்சனுக்கும் ஒரு கனவு போல இருந்தது. அவர்கள் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் 47 ஆண்டுகளுக்கு பின் வருகிறார்கள். அப்படியான ஒன்றை எங்கள் தலைமுறை பார்த்ததில்லை. ஒரே காரில் அவர்களுடன் அமர்ந்து வசனம் பேசுவதெல்லாம் கண்டிப்பாக கனவு போல தான் இருந்தது. இது ஒரு மகத்தான தருணம் என அவர்களிடமும் கூறினேன்." என்றார்.
தமிழ் தாண்டி பிறமொழிகளில் இசையமைப்பது என்பது எவ்வளவு சவாலாக இருக்கிறது எனக் கேட்கப்பட "அது எப்போதும் மாறாது. இன்னும் நேர்மையாக சொல்வதென்றால் அந்தப் பாடல்கள் அனைத்தையும் நான் தமிழில் உருவாக்க தான் ஆரம்பிப்பேன். தமிழில் உருவாக்கி, பின்னர் மற்ற மொழிகளுக்கு மாற்றுவோம். கடந்த 10 - 15 வருடங்கள் என்பது இசை உலகின் பொற்காலம் என சொல்லலாம். காரணம் சமூக வலைத்தளங்கள். அதன் மூலம் சென்றடையும் எல்லை விரிகிறது. இந்த காலத்தில் இருப்பது என்பது அதிர்ஷ்டம்.
இன்றைய தொழிழ்நுட்பங்களின் காரணமாக இசையமைப்பது என்பது யாருக்கும் சுலபமான ஒன்றே. 30, 40 வருடங்களுக்கு பின் சென்றால் சில இசையமைப்பாளர்கள் தான் இருப்பார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திறமையாளர்கள் வருகிறார்கள். இதில் போட்டி உருவாகும் தான், ஆனால் இதில் போட்டியை தாண்டி நட்பு தான் இருக்கிறது. எனக்கு முன்னால் வந்தவர் சந்தோஷ் நாராயணன். அவர் இசையில் நானும் என் இசையில் அவரும் பணியாற்றுகிறோம். சில சமயம் என்னுடைய பாடலை அவர் மிக்ஸ் செய்து கொடுப்பார். மேலும், என்னுடைய பேண்ட் குழுவில் இருந்த லியோன் ஜேம்ஸ், விவேக் - மெர்வின் போன்றோர் இசையமைப்பாளராகி இருக்கின்றனர். இதெல்லாம் ஒரே குடும்பம் போல தான்." என்றார்.
AI பயன்படுத்தி இசையமைப்பு துறையில் என்ன புது விஷயங்கள் நடக்கிறது, நீங்கள் வேட்டையனில் கூட மலேசியா வாசுதேவன் குரலை கொண்டு வந்த அனுபவம் எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு "அது மிகவும் அற்புதமாகி வருகிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். நாங்கள் அதனை முதலில் வேட்டையனில் தான் பயன்படுத்தினோம். ரஜினி சாரின் அறிமுகப் பாடல் என்றால் எஸ்.பி.பி தான் பாடுவார் என்பது மரபு. ஆனால் பேட்ட, தர்பார் படங்களிலேயே அவரை பயன்படுத்தினோம். வேட்டையன் படத்தில் மலேசியா வாசுதேவன் சார் குரலை பயன்படுத்தலாமா என யோசித்துக் கொண்டிருந்த சமயம் தான், AI பரவலாக தொடங்கி இருந்தது. எனவே, நாங்கள் அவரின் மகன் யுகேந்திரனிடம் அனுமதி கேட்டோம்.
ஆனால் யார் குரலை வேண்டுமானால் பயன்படுத்தி அதை மாற்ற முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. எனவே, அவர் குரலை ஒத்த குரலாக இருந்த அவரது மகனின் குரலை எடுத்துக் கொண்டோம். அதில் வேலை செய்து செய்து அந்த குரலை கொண்டு வந்தோம். ஆனால், இப்போது அந்த தொழில்நுட்பம் மிக நேர்த்தியாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறது." என்றார்.
நீங்கள் இசையமைக்கும் படங்களில் எல்லா பாடல்களையும் நீங்களே பாடுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? என்ற கேள்விக்கு "பொதுவாக ஒரு பாடலை உருவாக்கும் போது, உடனடியாக படப்பிடிப்புக்கு தேவை எனும் பட்சத்தில் முதலில் நானே அதனை பாடி அனுப்பிவிடுவேன். பின்னர் வேறு பாடகரை வைத்து பதிவு செய்யலாம் என நினைத்திருப்பேன். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் அந்தப் பாடலை பலமுறை அவர்கள் கேட்பார்கள், எடிட்டிலும் அதை வைத்தே எடிட் செய்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் என் குரலுக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள். 99 சதவீதம் நான் பாடிய பாடலை வேறொருவர் வைத்து தான் பதிவு செய்வேன். ஆனால், இயக்குநர் என்னுடைய குரலில் தான் வேண்டும் எனக் கேட்பார்கள். எனவே தான் இந்த சிக்கல். ஆனால் இனி சோம்பேறித்தனத்தை குறைத்துக் கொண்டு, யார் குரலில் நினைக்கிறோமோ, அவர்களையே பாடவைத்த பின்பு தான் பாடலை அனுப்ப வேண்டும் என முடிவெடுத்து கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறோம்" சமீபத்திய பேட்டியில் இசையமைப்பாளர் அனிருத்.