தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடித்து கடைசியாக வெளியான படம் அருண்குமார் இயக்கிய `வீர தீர சூரன் பாகம் 2'. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் வெளியானது. அதன் பிறகு அடுத்த படத்தை இன்னும் துவங்காமலே இருக்கிறார் விக்ரம். இப்போது அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் உலவுகிறது.
முதலில் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் `மண்டேலா', `மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. அப்படம் என்ன ஆனது என்று தெரியும் முன்பே வேல்ஸ் தயாரிப்பில் `96', `மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்து மீண்டும் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் போடி ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
இப்படமும் துவங்காமலே இருந்த சமயத்தில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் "நல்ல கதைகளுக்காக தான் காத்திருந்தேன். இப்போது, அப்படிப்பட்ட நான்கு கதைகளை தேர்வு செய்துவிட்டேன். நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்களுடன் அப்படத்தை துவங்க உள்ளேன்" என பதிவிட்டார். அதன் பிறகும் யார் இயக்குநர் என்ற அறிவிப்பு எதுவும் வரவில்லை. இப்போது இவர் சத்யா ஜோதி தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இவர்கள் இணைந்து `இருமுகன்' படத்தில் பணிபுரிந்தனர். இது பற்றிய அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.