இளையராஜா பயோபிக் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகியதாக பரவிய தகவல் பொய்யானது என படக்குழு தெரிவித்துள்ளது. தனுஷ் நடிக்கும் இந்தப் படம், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் `DC' படத்தை முடித்த பின்னர் துவங்கப்படும் எனவும், விரைவில் கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகை தனது இசையால் ஆளும் நபர் இளையராஜா. இசையில் பல சாதனைகள் செய்தவர் 1000க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் கூட இவருக்கு அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் பத்மபாணி விருது வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இளையராஜாவின் திரைப்பயணத்தை சினிமாவில் பதிவு செய்யும் விதமாக, அவரது பயோபிக் படம் `இளையராஜா' என்ற பெயரில் படமாக்கப்படுவதாக 2024ல் அறிவிக்கப்பட்டது.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிப்பார் என ஒரு தனி நிகழ்வு நடத்தப்பட்டு அறிவித்தனர். இந்த நிகழ்வில் இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், கமல்ஹாசன், தியாகராஜன் குமாரராஜா, தனுஷ் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 2 வருடங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும், படம் துவங்கப்படாமலே இருந்தது. எனவே இப்படத்தில் இருந்து அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டார் என தகவல்கள் பரவின.
இப்போது அதனை மறுத்துள்ள படக்குழு, "தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா பயோபிக்கில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யானது. லோகேஷ் கனகராஜ் நடிக்கும் `DC' படத்தை முடித்த பின்னர், பயோபிக் பணிகளை திட்டமிட்டபடி துவங்குவார் இயக்குநர். இதனை பற்றிய கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வரும்" எனக் குறிப்பிட்டுள்ளது.