Vishnu Vishal Arunraja Kamaraj
கோலிவுட் செய்திகள்

கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்படுகிறது... விஷ்ணு விஷால் அறிவிப்பு! | Vishnu Vishal | Arunraja

திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்சினையும் ஒன்று என்பதை திரைத்துறையினர் அனைவரும் அறிவர்.

Johnson

விஷ்ணு விஷால் – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் 2024ல் அறிவிக்கப்பட்ட படம், கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் சிக்கல்களால் கைவிடப்பட்டுள்ளது. கட்டா குஸ்தி 2 வெற்றிக்குப் பிறகு இந்த திட்டத்துக்காக பத்து மாதங்கள் தீவிரமாக தயாரான விஷ்ணு, ரசிகர்களுக்கு உண்மையை விளக்கி, இருவரும் திட்டத்திலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது `கட்டா குஸ்தி 2'. விஷ்ணு விஷால் மற்றும் அருண் ராஜா கூட்டணியில் உருவாகும் படம் 2024ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக இப்படம் நடக்கவில்லை என்பதால், அருண் ராஜா காமராஜ், விஷ்ணு விஷால் மீது இயக்குநர் சங்கத்தில் அளிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது இந்தப் படம் கைவிடப்படுவதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

Vishnu Vishal

அந்த அறிக்கையில் "கடந்த சில நாட்களாக, இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் நான் அடுத்ததாக பணியாற்றவிருந்த படம் குறித்து பல்வேறு தகவல்களும், யூகங்களும் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெளிவுபடுத்துவது எனது கடமை என்று நினைக்கிறேன். அவர்களும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த பத்து மாதங்களாக இந்தப் படத்திற்காக தீவிரமாக தயாராகியும் வந்தேன். கட்டா குஸ்தி 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இந்தப் படத்தை தொடங்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

ஆனால், சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்பட்டது. உண்மையில், தற்போது திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்சினையும் ஒன்று என்பதை திரைத்துறையினர் அனைவரும் அறிவர். இந்தப் படத்தை சாத்தியமாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருந்தாலும், இந்தப் படத்திலிருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

அவருடைய எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள், அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும். எப்போதும் போல, அடுத்து என்ன காத்திருக்கிறது என்பதை நினைத்து நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் ஏற்றிருக்கும் நிலையில், சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த முடிவும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

தற்போது, எனது கவனம் எனது அடுத்த வெளியீடான 'இரண்டு வானம்' படம் மீதும், எனது சகோதரரின் Yellow Yellow Dirty Fellow திரைப்படத்தின் மீதும் உள்ளது. அதே நேரத்தில், மிகவும் சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமானமான ஒரு விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் வெளியிடவுள்ளேன். தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனி வரும் காலங்களிலும் அதே அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.