ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம், டிஜிட்டல் நட்சத்திரம் என பிரபலமானவர் விக்கல்ஸ் விக்ரம். இவர் இப்போது ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். 'லைட் வெயிட் பேபி' என்ற இப்படத்தை கே சி குரு இயக்க, விக்ரமுக்கு ஜோடியாக ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விக்கல்ஸ் விக்ரம் ''2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். நான் ஒரு அமைதியான கலைஞன். என்னை போல என் ரசிகர்களும் அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். பிக் பாஸ் என்னை ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுடைய பிள்ளை போல மாற்றியுள்ளது.
இன்று ஒரு படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது, நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் - பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி. 2016ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இயக்குநர் கே சி குரு பேசுகையில், ''நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன். லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும், மறுபக்கம் எடை அதிகமாகவும் இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.'' என்றார்.
நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், ''இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்'' என்றார்.