பாண்டிராஜ் இயக்கிய ‘பரிமளா & கோ’ பட இசை வெளியீட்டில் பேசிய விஜய் சேதுபதி, தமிழக முதல்வர் விஜயிடம் அரசு சார்பில் ஓடிடி தளம் தொடங்க வேண்டும் என்று கோரினார். திடீரென வந்த ஓடிடி மார்க்கெட் தற்போது குழப்ப நிலை உருவாக்கியதால், அதை ஒழுங்குபடுத்த அரசு ஓடிடி அவசியம் என கூறினார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, அனந்திதா, சஞ்சனா எனப் பலரும் நடித்துள்ள படம் `பரிமளா & கோ'. மே 28ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி, விமல், சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியபோது முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கையை முன்வைத்தார்.
விஜய் சேதுபதியின் தன் கோரிக்கையை "மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு ஒரு கோரிக்கை. கமல் சார் கேட்டுக் கொண்டதை போல சீக்கிரம் அரசு சார்பில் ஒரு ஓடிடி துவங்கினால் நன்றாக இருக்கும். திடீரென ஓடிடி மார்க்கெட் என்று ஒன்று வந்தது. மேலே ஏற்றிக் கொண்டு போய் அப்படியே கைவிட்டுவிட்டார். இப்போது வியாபாரத்திற்கு எங்கே போவது என்ற குழப்ப நிலையில் இருக்கிறோம். எனவே ஓடிடி என்பதை கொஞ்சம் முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
மேலும் தியேட்டர் டிக்கெட் விலை எல்லாம் ஏற்றி பல காலம் ஆகிவிட்டது. எனவே அதையும் உயர்த்தினால் நன்றாக இருக்கும். இது எனக்குள் பலநாளாக இருக்கும் வேதனை. அதை சொல்ல வேண்டும் என தோன்றியது, இந்த மேடையை அதற்கு பயன்படுத்திக் கொண்டடேன். மற்ற எல்லாமே விலை ஏறிவிட்டது, படம் எடுப்பதற்கான செலவுகளும் அதிகமாகிவிட்டது. ஆனால் டிக்கெட் விலை மட்டும் ரொம்ப வருடமாக அப்படியே இருக்கிறது. அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஓடிடி ஒருபக்கம் இறங்கிவிட்டது, இதை எல்லாம் சரி செய்ய டிக்கெட் விலை ஏற்றினால் நன்றாக இருக்கும்." என்று முன்வைத்தார்.