விஜயின் ஃபேமிலி ஹீரோ இமேஜை உருவாக்கிய ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ முதல், ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய ‘திருப்பாச்சி’ வரை, ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் முக்கிய பங்கு வகித்தது. 100வது படத்தில் விஜயை நடிக்க வைக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாத நிலையில், தற்போது அவர் மரணம் சினிமா உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தை ஆர்.பி.சௌத்ரி (74) நேற்று மாலை ராஜஸ்தானில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலியானார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இன்று அவரது உடல் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் நேரில் சூர்யா, தனுஷ், கார்த்தி, மம்மூட்டி எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். தற்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேரில் வந்து நடிகர் ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.
விஜயின் சினிமா பயணத்தில் ஆர் பி சௌத்ரியின் ஆதரவு மிக அழுத்தமான ஒன்று. அதுவரை மசாலாவான கவர்ச்சி காட்சி உள்ள படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்க்கு குடும்பங்கள் மத்தியில் வரவேற்பை உண்டாக்கி கொடுத்த சூப்பர் குட் தயாரிப்பில் விக்ரமன் இயக்கிய `பூவே உனக்காக' படம். அந்தப் படத்துக்கு பின் விஜய்க்கு ஏற்பட்ட இமேஜ் அவரின் சினிமா பயணத்தையே மாற்றியது. பூவே உனக்காக படத்திற்கு பின் மீண்டும் `லவ் டுடே' படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர் ஆர் பி சௌத்ரி - விஜய். பூவே உனக்காக குடும்பங்களை கவர்ந்தது போல, `லவ் டுடே' பெண் ரசிகைகளை விஜய்க்கு அதிகம் பெற்று தந்தது. எழில் இயக்கத்தில் உருவான `துள்ளாத மனமும் துள்ளும்' படமும் விஜய் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம். இந்தப் படத்தின் போது விஜய் ஒரு ஸ்டாராக வளர்ந்திருந்த சமயம். அப்போது குடும்பங்கள் + பெண் ரசிகைகளை ஒருசேர கவரும் படமாக இது அமைந்தது.
விஜய்யை குடும்பங்கள், பெண்களிடம் கொண்டு சேர்த்த அதே சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அவரின் ஆக்ஷன் ஹீரோ இமேஜுக்கும் மைலேஜ் ஏற்றியது. `பகவதி', `திருமலை' என தன் ஆக்ஷன் அவதாரத்துக்கு அஸ்திவாரம் போட்டிருந்த விஜய்க்கு `திருப்பாச்சி' என்ற திருப்புமுனை படத்தை கொடுத்தது ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வளர்ச்சியை உறுதி செய்த ஆர் பி சௌத்ரி மீது விஜய்க்கு தனி மரியாதை. வேலாயுதம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய நேசன் சொன்ன கதை பிடித்து போக, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த விஜய் ஆர் பி சௌத்ரிக்கு ’ஜில்லா’ படத்தை கொடுத்தார். கிட்டத்தட்ட தன் வளர்ச்சிக்கு உதவியதற்கான கைமாறாக இதை செய்ய நினைத்து கொடுத்தார். சௌத்ரிக்கும் விஜய் மீது அதே அளவு அன்பு என்பதால் படத்தில் இயக்குநர் கேட்ட எதற்கும் நோ சொல்லவில்லை. படத்தில் மதுரை செட் போடுவதில் துவங்கி, மோகன்லாலை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது வரை எல்லாவற்றுக்கும் அவரின் பதில் ஓகே மட்டுமாக தான் இருந்தது.
தற்போது விஷால் இயக்கி நடித்து வரும் `மகுடம்' படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படம். இவர் 100வது படத்தில் எப்படியாவது விஜயை நடிக்க வைக்க வேண்டும் என்பது ஆர்.பி.சௌத்ரியின் ஆசையாக இருந்தது. இப்போது என்றில்லை விஜயின் அரசியல் வருகைக்கு பல வருடங்கள் முன்பே கூட அந்த ஆசையில் தான் இருந்தார். அதற்கான சில பேச்சுவார்த்தைகள் கூட நடந்தது. ஆனால் பல காரணங்களால் அந்த 100வது படம் நடக்காமல் போனது. எது எப்படியோ விஜய் - சௌத்ரி உறவு என்பது மிகவும் உறுதியாக இருந்தது என்பது மட்டும் மறுக்கவே முடியாதது. இன்று ஜீவாவை கட்டித்தழுவி ஆறுதல் சொல்லும் அந்த வீடியோவிலேயே அது நிரூபணபம் ஆகி இருக்கும்.