Vetrimaaran Neelira Dhurandhar
கோலிவுட் செய்திகள்

"கோடிகளை வசூலிக்க வெறுப்பை பேசும் படம் அல்ல!" - மறைமுகமாக Dhurandhar-ஐ சாடிய வெற்றிமாறன் | Neelira

இந்தப் படம் வெறுப்பைப் பேசவில்லை, வன்முறையைப் போதிக்கவில்லை, பிரசாரப் படமும் இல்லை. ஒரு சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படமுமில்லை.

Johnson

சோமீதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா, விது, சிந்து குமரேசன் எனப் பலரும் நடித்துள்ள படம் `நீளிரா'. இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "நம்முடைய கதைகளை நாம் சொல்லும்வரை, எதிரிகள் சொல்வதுதான் நம் வாழ்க்கை, எதிரிகள் சொல்வதுதான் நியாயம். அந்த இடத்திலிருந்துதான் ’நீளிரா’வைப் பற்றிப் பேச துவங்க வேண்டும் என நினைக்கிறேன். இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஓர் இளைஞன், தன்னுடைய வழியை, நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த இன்னோர் இளைஞனுடன் சேர்ந்து படமாக செய்திருக்கிறார். அந்த விதத்தில் நம் கதையை நாமே சொல்வதற்கான ஜனநாயகம் இன்று இருப்பதே சந்தோசம்தான். அதற்கு தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள். உங்களைவிட ராணா இதற்குள் வந்ததுதான் ஆச்சர்யம். இன்னொரு நிலத்திலிருந்து வந்து ஈழத்துப் பிரச்னையைப் புரிந்து இதனை எடுப்பது வரவேற்புக்குரியது. இங்கு நம்முடைய ஈழத்து மக்களின் வலியை, நம் சகோதரர்களின் வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். அவர் அப்படி இல்லை. ஆனால் சினிமாவின் வாயிலாக அதனைச் சாத்தியப்படுத்திய சோமீந்திரனுக்கு வாழ்த்துகள்.

Vetrimaaran

ஓர் எழுத்தாளராக சோமீந்திரனுடைய சாதனை அளப்பரியது. இந்தப் படத்துக்குள் வன்முறை இல்லை எனச் சொன்னார்கள். காட்சிகளாக வன்முறை இல்லைதான். ஆனால் இது அதீத வன்முறை படம். கதவை பத்து பேர் தட்டுகிறார்கள் என்றதும் வீட்டுப் பெண்கள் அனைவரும் நிறைய சட்டைகளை அணிகிறார்கள் என்ற விஷயம் அதிர்ச்சிக்குரியது. ஒரு ராணுவக்குழு நம் வீட்டு வாசலில் வந்து அமர்கிறது என்றால், அது நமக்கு ஏற்படுத்தக்கூடிய உணர்வு, பயம், அந்த உடைக்கு எப்போதுமே இருக்கக்கூடிய தன்மை அச்சம் தரக்கூடியது.

இந்திய சென்சாரில் இப்படியான ஒரு படத்தைக் கொண்டுசென்று வெளியே வருவது என்பது தனித்திறமை. அதில் நிறைய சவால்கள் வரும். நாம் சொல்ல வேண்டியதைச் சொல்வதற்கும், அவர்கள் எடுக்க வேண்டியதைக் கொடுப்பதற்கும் திட்டமிட்டுதான் நாம் படம் எடுக்கிறோம். இந்தப் படத்தை திரைவிழாவுக்கு பரிந்துரை செய்வதற்காக பார்த்தேன். அப்போது படம் சென்சார் செய்யப்படவில்லை. சமீபத்தில் பார்த்தபோது சென்சார் செய்த படத்தைப் பார்த்தேன். சென்சார் செய்த பிறகு இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படும் விஷயங்கள் சென்சார் ஆகி இருப்பதையும், மறைமுகமாகச் சொல்லப்படும் விஷயங்கள் அப்படியே இருப்பதையும் நான் கவனித்தேன்.

ஒரு போர் சூழலுக்குள் மக்களுக்காகப் போராடும் இயக்கமும், மக்களும் என்னவாக ஒரு ராணுவ அமைப்பைப் பார்க்கிறார்கள் என்பது பல இடங்களில் இருக்கின்றது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள், யாரோடு நிற்கிறார்கள் என்பது படத்தில் இருக்கிறது.  போர் என்ன மாதிரியான சிந்தனைகளைத் தொடர்ந்து உருவாக்குகிறது என்பது இருக்கிறது. இந்தக் கதை வடிவமைக்கப்பட்டுள்ள விதமும், கதாபாத்திரங்களின் நியாயங்கள் சொல்லப்படுவதும் இருக்கிறது. சில கதாபாத்திரங்களின் நியாயம் பலவீனமானதாக இருக்கும். தோற்றத்துக்கு நியாயமாக இருக்கலாம், ஆனால் அது நியாயம் இல்லை என்பது அவனுக்கே தெரியும் என்பதுபோல இருக்கும். அவை சென்சாருக்காகச் செய்யப்பட்ட கண்கட்டி வித்தை என்பது புரிகிறது.

எல்லோரும் சொல்வதுபோல இந்தப் படம் வெறுப்பைப் பேசவில்லை, வன்முறையைப் போதிக்கவில்லை, பிரசாரப் படமும் இல்லை. ஒரு சித்தாந்தத்தை தூக்கிப்பிடித்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படமுமில்லை. பல நூறு கோடி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வெறுப்பையோ அல்லது வன்முறையையோ பணமாக்க விரும்பாத படம் இது. அந்த வகையில் இது எந்த இனத்தின், மதத்தின், சமூகத்தின் மீதும் வெறுப்புணர்வை உருவாக்கி, விற்க விரும்பாத படம். யாரையும் நேரடியாக விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் சம்பவங்களை மட்டும் சொல்கிறது.

Vetrimaaran

வரலாற்றுத் தருணங்களில் இருந்து நம் வாழ்க்கைக் கதைகளை உருவாக்குவது என்பது, நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழி. வரலாறு என்பது அதிகாரத்தால் எழுதப்படுவது. இந்தப் பிரச்னை குறித்து எழுத்துருவில் நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆனால் மெய்ன்ஸ்ட்ரீம் சினிமாவுக்குள் இந்த பிரச்னைகளைச் சொல்வது என்பது, உரையாடலை நிகழ்த்துவதற்கு இலகுவான சூழலை உருவாக்கத் துவக்கமாக இருக்கும்.

இதுபோன்ற கதைகளைச் சொல்வதன் மூலம் உண்மையை நாம் பாதுகாக்க முடியும். இன்றைக்கு எல்லாமே Propaganda-வாக மாறுகிறது. அந்த Propaganda நினைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. நினைவுகள் என்பது நிலையற்றது. நம் எல்லாருக்குமே தெரியும் Demonetisation-னில் யார் அதிகம் பாதிக்கப்பட்டது என. எவ்வளவு பேர் பணத்தைப் பெற வரிசையில் நின்று செத்துப் போனார்கள் என தெரியும். ஆனால் அந்தத் தாக்கத்தை எளிமையாக மாற்ற முடிக்கிறது. அவதூறு பிரசாரத்துக்கு எதிராக நாம் செய்ய வேண்டியது இதுபோன்ற படங்களை எடுப்பது. அதன்மூலம் நம் நினைவுகளைச் சரியான வகையில் வடிவமைக்க உரையாடலை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்" என்றார்.