டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படம் ஏப்ரல் 9 வெளியீட்டை முன்னிட்டு நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘லோகா’ படத்தில் நடித்தும் தனது பெயர் குறிப்பிடப்படாத விவகாரம் குறித்து அவர் பதிலளித்தார். துல்கர் சல்மானுடன் தன் நீண்டநாள் நட்பு, உதவி இயக்குநராக தொடங்கிய பயணம், வதந்திகளை நகைச்சுவையுடன் எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை அவர் விரிவாக விளக்கினார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள `பள்ளிச்சட்டம்பி' ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் `லோகா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் நீங்களும் நடித்தீர்கள். ஆனால் படக்குழுவினர் உங்கள் பெயரை எங்குமே குறிப்பிடவில்லையே ஏன்? எனக் கேட்கப்பட "ஏன் என்னைப்பற்றி பேசவில்லை என கண்டிப்பாக நான் அவர்களிடம் கேட்கிறேன். ஆனால் நாங்கள் எல்லோரும் பல வருடங்களாக ஒன்றாக சேர்ந்து நடித்து வருகிறோம், ரொம்ப நாள் பரிட்சயமும் கூட. நான் ஒரு உதவி இயக்குநராக தான் என் பயணத்தை துவங்கினேன்.
உதவி இயக்குநராக என் முதல் படமே துல்கர் சல்மான் நடித்த `Theevram' படம் தான். அதன் பிறகு துல்கர் சல்மான் நடித்த ABCD என்ற படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்னிடம் மிக இனிமையானவராக தான் நடந்து வருகிறார். நீங்கள் சொன்னதை பதிவு செய்து கொடுத்தீர்கள் என்றால், அதை கேட்டு நாங்கள் எல்லோரும் சிரிப்போம். அந்தப் படத்தின் இயக்குநர் அருண் டோம்னிக் முதலில் இயக்கிய `தரங்கம்' படத்தில் நான் தான் ஹீரோ. கல்யாணி ப்ரியதர்ஷனுடன் நான் `தள்ளுமாலா' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். நஸ்லின் என் சகோதரர் போன்றவர்.
துல்கர் சல்மான் என் நெருங்கிய நண்பர். வேண்டுமென்றால் எங்கள் வாட்ஸ் ஆப் சாட்களை காண்பிக்கிறேன். அப்போது தெரியும் எங்கள் நட்பின் நெருக்கம் என்ன என்று. வெளியே இருந்து இதுபோன்ற வதந்திகளை கொளுத்திப் போடுவது சுலபமானது. ஆனால் இது போன்ற விஷயங்களை படிக்கும் போது நாங்கள் சிரிக்க தான் செய்வோம். அந்தப் படத்திலிருந்த அனைவரும் என் நண்பர்கள் தான். இப்போது அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருகிறது. அப்படத்திற்காக நாங்கள் இங்கு வந்து மீண்டும் அமரும் போது நீங்கள் இதே கேள்வியை கேளுங்கள். மேலும் இந்தப் படத்தின் ரிலீசுக்கு பிறகு கூட, படத்தின் புரமோஷன் துபாயில் இருக்கிறது நீயும் வா என எனக்கு டிக்கெட் போட்டு அழைத்து சென்றார். அப்படி இருக்க இந்த மாதிரி ரூமர்ஸ் எப்படி வருகிறது, இதன் மூலம் அவர்களுக்கு கிடைப்பதென்ன?" என்றார்.