`டிராகன்'க்கு பின் தமிழில் நடிக்காததற்கு காரணம்.! - கயாடு லோஹர் | Kayadu Lohar
கன்னடத்தில் ‘முகில்பேட்டை’ மூலம் அறிமுகமான கயாடு லோஹர், மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ‘டிராகன்’ மூலம் பெரும் வரவேற்பு பெற்ற அவர், இன்னும் தமிழ் பேச கற்றுக்கொண்டு வருவதாகவும், ஒவ்வொரு மொழியையும் 100% உழைப்புடன் கற்க நேரம் தருமாறு கேட்டுக்கொண்டார். அடுத்த முறை தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசுவேன் என உறுதியளித்தார்.
கன்னடத்தில் `Mugilpete' படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். பின்னர் மலையாளத்தில் Pathonpatham Noottandu, Oru Jaathi Jaathakam, தெலுங்கில் Alluri, Funky போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய `டிராகன்' படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றார். இவர் இப்போது நடித்துள்ள மலையாளப்படம் `பள்ளிச்சட்டம்பி'. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கயாடுவிடம் தமிழில் பேச இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா எனக் கேட்டதும் "நான் பல மொழிகளில் நடித்து வருகிறேன். நான் தென்னிந்தியாவை சார்ந்தவள் இல்லை. என்னால் முடிந்த வரையில் ஒவ்வொரு மொழியையும் பேச முயல்கிறேன். வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் போது, அதன் மையமே அம்மொழியை பேசுவதுதான். நான் ஒவ்வொரு மொழியையும் கற்க 100 சதவீத உழைப்பை போடுகிறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தாருங்கள். நான் அடுத்து வரும் போது தமிழ், மலையாளம் மேலும் பிற மொழிகளையும் நன்றாக பேசுகிறேன்.
அடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லையே எனக் கேட்ட போது "நான் சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல அழுத்தமான கதைகளுடன் திரும்ப வர வேண்டும் என நினைக்கிறேன். டிராகன் படத்திற்கு பார்வையாளர்கள் கொடுத்த அன்பு பெரியது. இன்னும் வித விதமான கதைகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். சரியான கதை அமைந்ததும் அதனை அறிவிப்பேன்." என்றார் கயாடு லோஹர்.

