Ajithkumar pt
கோலிவுட் செய்திகள்

"அஜித் சார் படம் நடக்காததற்கு காரணம்.." - விக்னேஷ் சிவன் சொன்ன விளக்கம்!

நானும் ரௌடிதான் படம் இயக்கும் போதே எனக்கு அஜித் சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கான கதையும் என்னிடம் பல வருடங்களாக இருந்தது.

Johnson

அஜித் குமாரை வைத்து பல வருடங்களாக மனதில் வைத்திருந்த கதையை இயக்க முடியாமல் போனதற்கு பட்ஜெட் கட்டுப்பாடுகள், இரண்டாம் பாதி கதையில் தயாரிப்பு தரப்பின் வேறுபட்ட கருத்துகள் காரணம் என விக்னேஷ் சிவன் கூறுகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடித்து வெளியான படம் `LIK'. இப்படம் தொடர்பான பேட்டிகளின் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் LIC படம் உருவாக இருந்து மாறியது பற்றி பேசினார்.

LIK

அது பற்றி விக்னேஷ் சிவன் சொன்ன போது "2018ல் இந்தக் கதை LICயாக சிவகார்த்திகேயன் சார் நடிப்பில் உருவாக்க வேண்டியது. ஆனால் தயாரிப்பு தரப்பு இந்தக் கதை இப்படி, அப்படி என்றார்கள். என்னால் கதையை ரொம்பவும் மாற்ற முடியாது. நான் கதை சார்ந்து இயங்கக் கூடிய இயக்குநர். 6 மாதம் முதல் 1 வருடம் ஒரு கதையில் பயணிப்பதற்கும், 4 - 5 வருடம் பயணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் இதுவரை எடுத்திருக்கும் எல்லா கதைக்கும் குறைந்த பட்சம் 4 வருடம் பணியாற்றி இருப்பேன். 2012ல் போடா போடி படம் வெளியான போது `காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் முழு கதையும் என் கையில் இருந்தது. ஆனால் நான் உடனடியாக `காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை எடுக்கவில்லை. `நானும் ரௌடி தான்' படத்தையே இயக்கினேன்.

Vignesh Shivan

பத்து வருடமாக ஒரு கதை என்னிடம் இருக்கிறது என்பதால், அதன் மூளை முடுக்கெல்லாம் எனக்கு தெரியும். மேலும் நான் எடுக்கும் எந்தப் படத்திற்கும் ரெஃபாரன்ஸ் இல்லை, எங்கிருந்தும் காப்பி அடித்து செய்வதுமில்லை. எனவே அது விதிமுறைகளுக்குள் இருக்காது. இரண்டு பேரை காதலிக்கும் கதையை குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் படமாக கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முயற்சியாக இருக்கும். ஒரு பழிக்குப்பழி கதையை ரத்தமே காட்டாமல் எடுக்க வேண்டும் என்பது தான் யோசனையாக இருக்கும். `நானும் ரௌடிதான்' ஒரு `கில்பில்' மாதிரியான படம் தான். ஆனால் அதில் ரத்தம் இருக்காது, என்னுடைய குழந்தைகள் கூட அதனை பார்ப்பார்கள்." என்றார்.

மேலும் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படம் பற்றியும் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன அவர், "நானும் ரௌடிதான் படம் இயக்கும் போதே எனக்கு அஜித் சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கான கதையும் என்னிடம் பல வருடங்களாக இருந்தது. ஆனால் மீண்டும் பட்ஜெட் காரணங்கள் தான் தடையாக வந்தது. மேலும் இரண்டாம் பாதி கதையிலும் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தது. இப்போது கூட நிறைய படங்கள் துவங்கும் முன்பே டிராப் ஆகும். அப்படி டிராப் ஆக காரணம் என்ன என யாருக்குமே தெரியாது. அதை பேசுவதிலும் அர்த்தமில்லை. அஜித் சார் போன்ற ஒரு நடிகர் என்றால், ஒரு ரசிகராக அவரை சிறப்பாக காட்ட ஆசை இருக்கும். மத்த மொழிகளில் RRR, KGF வருகிறது. எனக்கும் அப்படி செய்ய ஆசை இருக்கும். சில நேரம் தயாரிப்பு தரப்பு அதற்கு ஒத்துழைப்பு தந்தால் நடக்கும், தரவில்லை என்றால் நடக்ககாது" என்றார்.